கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கோவிட் வேரியன்ட் எத்தகைய வீரியம் உடையது, அது ஆபத்தானதா போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.
“தற்போதைய சூழலில் கோவிட் தொற்று ஆங்காங்கே ஏற்பட்டாலும் பெரிதாக பயம்கொள்ளத் தேவையில்லை. இதற்கு முக்கியமாக இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தத் தொற்றின் வீரியம் ஆரம்பக் காலகட்டங்களில் இருந்ததை விட தற்போது குறைவாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தொற்று என இல்லாமல், எந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் பல அலைகளைக் கடந்து வருகையில் தொற்றின் வீரியம் குறைந்து விடும். அதுபோலவே கோவிட் தொற்றின் வீரியமும் குறைந்து விட்டது. இன்னொரு காரணம், மக்களிடம் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் அதிகமாக உள்ளது. தடுப்பூசி பலருக்கும் செலுத்தப்பட்டுவிட்டது.