இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் 11 வீரர்களில் சுயாஷி சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. போட்டியின் நடுவே, வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ‘Impact Player’ ஆகவே சுயாஷ் களமிறக்கப்பட்டார். இப்படி வந்தவர் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரன் சர்மா ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற மிஸ்டரி ஸ்பின்னர்களின் பந்துவீச்சை ஒரு கீப்பராக இருந்து அதிகம் கவனித்திருக்கிறார். அதனால்தான் அவரால் கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆட முடிகிறது என கமெண்ட்ரியில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பேச்சு ஓடி முடிந்த சில நிமிடங்களிலேயே தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை சுயாஷ் வீழ்த்தினார்.
போட்டிக்குப் பிறகு இவரின் திறமை குறித்துப் பேசிய அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, “சுயாஷ் சர்மா தன்னம்பிக்கை கொண்ட இளம் வீரர், அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரின் பவுலிங் திறமையைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.