பஞ்சாபின் பேட்டிங் சிறப்பாக இருந்த அளவுக்கு பௌலிங்கும் ஃபீல்டிங்கும் சிறப்பாக அமையவில்லை. நாதன் எல்லீஸ்தான் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி எக்கனாமிக்கலாகவும் பந்துவீசியிருந்தார். டெத் ஓவரிலெல்லாம் பயங்கர அடி வாங்கியிருந்தார்கள். கடைசி ஓவரில் எப்படியோ சாம் கரன் சமாளித்துவிட்டார். ஃபீல்டிங்கில் பல கேட்ச்சுகளையும் மிஸ் ஃபீல்ட்களையும் செய்திருந்தனர். ஆனால், இத்தனைக்குப் பிறகும் ராஜஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணியின் சார்பிலும் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஜூரேஷ் ஆகியோர் சிறப்பாகத்தான் ஆடியிருந்தனர். ஆனாலும் டார்கெட்டுக்கு நெருக்கமாகத்தான் வந்திருந்தார்களே தவிர, டார்கெட்டை எட்டிப்பிடிக்க முடியவில்லை.
ராஜஸ்தான் அணியின் தோல்விக்கான மிக முக்கிய காரணமாக தேவ்தத் படிக்கலைத்தான் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அத்தனை வீரர்களும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்க படிக்கல் மட்டும் 80 ஸ்ட்ரைக் ரேட்டில் ரொம்பவே மெதுவான ஒரு இன்னிங்ஸை ஆடியிருந்தார். பவர்ப்ளேக்குள்ளேயே க்ரீஸூக்குள் வந்தவர் 15வது ஓவரில்தான் அவுட் ஆகியிருந்தார். அத்தனை ஓவர்களுக்கு க்ரீஸில் நின்ற போதும் 26 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார். கடைசியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்றதை பார்க்கையில் தேவ்தத் படிக்கல் ஒரு 100-120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தால் கூட ராஜஸ்தான் வென்றிருக்கக்கூடும்.