திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருப்பூரில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் போட்டி அரசாங்கம் நடத்தி வருவதை சுட்டிக்காட்டும் வகையில் திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் தொடர்ந்து தமிழகத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற வேண்டிய கவர்னர் வெளிப்படையாகவே இந்தியா இந்துக்களின் நாடு என பேசி வருகிறார். இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29ம் தேதி சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நடத்த இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப பெற்றிருக்க வேண்டும். ஆனால் திரும்ப பெறாததன் காரணமாக இது ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டமும் ஆகும்.
தமிழக அரசின் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவித்தது வரவேற்கத்தக்க வகையில் அமைந்திருந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் கடந்த ஆண்டு போல கரும்பு, தேங்காய், முந்திரி திராட்சை உள்ளிட்ட பொருட்களை வழங்க தமிழக அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.