இப்படியாக ஒவ்வொருவராய் அமர்த்தி இறுதியாக கிடைத்த ஸீட்டில் நான் அமர, என் மடியில் கார்த்து. அப்படி ஒரு எதிர்காற்றை எங்கள் இருவரின் முகமும் அனுபவிக்கும் அடுத்த நொடியே, “வ்ஷ்ஷ்ஷ்”, எனக் கேட்டுவிடும் விசில் சத்தம்! “லஸ் லாம் இறங்குங்க…”, என்பார் கண்டக்டர்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தா என்ன? என்ன அவசரம், ஏன் அவசரம் ஏ, பெண்ணே!”, என்று கார்த்துவின் மனதில் ஓடியிருக்கக்கூடிய பாடலை பாஸ் செய்துவிட்டு, பள்ளி வாகனத்திலிருந்து இறக்கப்படும் குழந்தைகள் போல அனைவரையும் வரிசையாய் இறக்கிவிடுவேன்.
லஸ் கார்னரில் இறங்கி, பீச் சோ, நாகேஸ்வரராவ் பூங்காவோ, நவசக்தி விநாயகர் கோவிலோ, ரோட் சைட் ஷாப்பிங்கோ முடித்துவிட்டு திரும்புகையிலும் இதே போன்றதொரு 29C தான்! அதுவும் அதே கண்டக்டர், அதே வண்டி என்றதால் எங்களுடன் பிஃரெண்ட் ஆகி விட்டனர் ஓட்டுனரும் நடத்துனரும்! திரும்பும் சமயம் அரை டிக்கெட் எல்லாம் அரை தூக்கத்தில் இருக்கும்!
பெசன்ட் நகரில் தொடங்கி பெரம்பூர் வரை செல்லும் 29C யில், நாங்கள் பயணித்ததென்னவோ அதிகபட்சமாக, மந்தவெளி, மயிலை, கத்திடரல் ரோடு வரை தான். ஆனால் அதில் பயணித்த அனுபவம் அலாதியானது.
பின்பு நான் கல்லூரி முடித்து வேலை தேடி வந்த போது, அதே அய்யா வீட்டில் தான் தங்கி இருந்தேன். என் அய்யாவிற்கு சென்னை முழுக்க அத்துப்படி! எதைக் கேட்டாலும் அவரால் விரிவான, குழந்தைக்கும் புரியும் படியான விளக்கத்தைச் சொல்லிவிட முடியும். நடமாடும் அன்றைய கூகுள் அவர்! எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் எந்த ஸ்டாப், எந்த நேரம், எந்த ரூட், எவ்வளவு கூட்டம், ஏன்? எவ்வளவு கட்டணம் என்று கூட புட்டு புட்டு வைப்பார்!
அப்படியே அவர் சொல்வதை கவனமாகக் கேட்டு பின்பற்றினால் போதும். சென்னையின் எந்த மூலைக்கும் இலகுவாக சென்றுவிடலாம்.
இதுநாள் வரை மயிலை, மந்தவெளி, லஸ் மட்டுமே தனியாக போய் வர பழகியிருந்த நான், இம்முறை திறந்தவெளி வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கோ அல்லது அவர்கள் நடத்தும் மாபெரும் அளவிலான ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வ்யூவிற்கோ சென்னை முழுக்க செல்ல வேண்டியிருந்தது. மற்ற நண்பர்கள் அதற்கு வர சிரமப்பட்டாலும், அய்யா என்கிற கூகுள் மேப் என்னிடம் இருந்ததால், எனக்கு எல்லாம் சுலபமே!
இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான இடங்களுக்குச் செல்ல நான் மீண்டும் ஏற வேண்டியிருந்தது 29C தான்! 29C ராசியாலோ என்னவோ, வேலையும் உடனே கிடைத்துவிட்டது! வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும்…
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அந்த அலுவலகக் கட்டிடம் பல இடங்களில் இருந்தாலும், எங்கள் ட்ரெயினிங் பீரியட் கத்திடரல் ரோடு சி.எஸ்.ஐ. பில்டிங்கில் தான். பிறகு என்ன? மீண்டும் 29C!
சென்னை MTC பேருந்துகளில் ஒரு பெரிய சினிமாவே எடுத்து விடலாம். அவ்வளவு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும்! அத்தனை உணர்ச்சிகளும் வெளிப்படும் விதவிதமான மனிதர்களால். பெரும்பாலும் பஸ் என்றாலே, ஆண்கள் தவறான பார்வை பார்ப்பதும், சீண்டுவதும், பிக்பாக்கெட் அடிக்கும் காட்சிகள் தான் நம் கண் முன் நிற்கும்!
ஆனால் நான் கண்டது, காண்பது வேறொரு கண்ணோட்டத்தில்… ஒரு நல் உலகை. ஒவ்வொன்றையும் அவ்வளவு ரசிப்பேன்!
காலை அலுவலகம் செல்ல அதில் பயணிக்கும் என்னைப் போன்ற பலர் பரபரப்பாகவே வீட்டில் இருந்து கிளம்பி ஓடி வந்து பஸ்ஸைப் பிடிப்போம். பஸ் ஸ்டாப்பின் எதிர்ப்புரம் தான் எங்கள் வீடு என்பதால், நான் அவ்வளவு பிஸியான நேரத்தில் ரோட்டை க்ராஸ் செய்வதற்குள், பஸ்ஸை விட்டுவிடும் நிலைமை இருக்கும். இருந்தும் “நிதானமா க்ராஸ் பண்ணும்மா. நா வெயிட் பண்றேன்”, என்பது போல சைகை காமித்துக் காத்திருப்பார் ஓட்டுனர் அண்ணன்! பத்திரமாய் க்ராஸ் செய்து “தேங்க்ஸ் அண்ணா!”, என்றபடி ஏறிடுவேன். ஏறியதும் உடனடியாக பெண்களுக்காக தன் இடத்தை விட்டுக்கொடுக்கும் ஆண்கள் எத்தனையோ பேர்!
இன்றும், எனக்கு இருக்கை கிடைத்ததும், யார் கையில் ஹேண்ட்பேக், லஞ்ச் பேக், குழந்தை அல்லது பள்ளி செல்லும் பிள்ளைகளின் ஸ்கூல் பேக் என எதுவானலும் நான் வாங்கி வைத்துக்கொள்வேன்.