இந்திய கிரிக்கெட் வீராங்கனை சஜானா சஜீவன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான `கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே நடித்திருந்தார். இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவிலுள்ள வயநாடு பகுதியில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த கடும் வெள்ளத்தினால் சஜானா சஜீவனின் வீடும் பாதிக்கப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிவகார்த்திகேயன் அப்போது சஜானாவுக்கு உதவியிருக்கிறார். இது குறித்து சஜானா சஜீவன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “ 2018-ல் வயநாடு வெள்ளத்தில் என்னுடைய வீடு பாதிக்கப்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் அண்ணா என்னை தொடர்புகொண்டு, `ஏதேனும் உதவி வேண்டுமா?’ எனக் கேட்டார். அந்த கடும் வெள்ளத்தில் என்னுடைய கிரிக்கெட் கிட் மொத்தமாக போய்விட்டது. இப்போதைக்கு ஸ்பைக்ஸ் ஷூ மட்டும் தேவைப்படுகிறது என்றேன். ஒரு வாரத்திற்குள் நான் கேட்டதை வாங்கி அனுப்பிவிட்டார். அந்த சமயத்தில் நான் சேலஞ்சர் டிராஃபி போட்டிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு அனைவரும் என் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அந்த சமயத்தில் அனைவரும் பக்கபலமாக இருந்து உதவினர். ” எனக் கூறியிருக்கிறார்.