குறைந்தபட்சம் 30 கூட்டங்களுக்கு மேலாக டெல்லி நிர்வாகிகளுடன் நடத்திய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள், அனைத்து கூட்டங்களிலும் அழுத்தமாகச் சொல்லி வலியுறுத்தியது. “டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கிட்டத்தட்ட 30 வருடங்களாகப் போகிறது. இதுதான் நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளும் கடைசியானது. இதைச் சரியாக நீங்கள் செய்து முடிக்கவில்லை என்றால், உங்கள் அரசியல் எதிர்காலத்தை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்” எனத் திட்டவட்டமாகச் சொல்லி இருந்தார்கள்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்விக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டது போன்ற பல விஷயங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஹரியானாவில், ராஜஸ்தானில், ஒடிசாவில், மகாராஷ்டிராவில் கட்சியின் தேசிய தலைமையின் உத்தரவுகளை கச்சிதமாகச் செய்து முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய அதிமுக்கிய பதவிகளையும் காரணங்களாகக் காட்டி, வேலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்.

அதனால்தான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பம்பரமாய் சுழன்று வேலை பார்த்தார்கள் பாஜக-வின் டெல்லி நிர்வாகிகளும், தொண்டர்களும். ஒவ்வொரு டெல்லி வாசிகளின் வீட்டையும் ஒரு முறையாவது தட்டி வாக்கு சேகரிக்க வேண்டும். கட்சிப் பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரிடமும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைமை கட்டாய உத்தரவாகப் பிறப்பித்ததால், போட்டி கடுமையாக இருக்கக்கூடிய பல தொகுதிகளில் இரண்டு தெருக்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற வீதம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, வேலைகள் மும்முரமாக நடந்தன.
பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்… அவ்வளவு ஏன் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தேசிய தலைமை தலைமை இறக்கி இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் சிறு பிரச்னைக்கூட ஏற்படாமல் பிரசாரங்களைக் கச்சிதமாக நடத்திக்காட்டி இருக்கிறார்கள். பிரதமரது தேர்தல் பொதுக்கூட்டம் தொடங்கி தெருமுனைக் கூட்டம் வரை சிறு பிசிரு இல்லாமல் ஒருங்கிணைத்துச் செய்து காட்டி இருக்கிறார்கள். இதில் பாஜக டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவின் ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது. அதனால்தான் தேர்தலில் கூட போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே முன் நின்று நடத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றுத் தந்ததற்காகவே இரண்டு முறை மத்திய இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து அழகு பார்த்த பாஜக தலைமை, டெல்லி மாநில நிர்வாகிகள் பலருக்கும் உரிய அங்கீகாரத்தைத் தேர்தல் வெற்றிக்கான பரிசாக வழங்க உள்ளது என்கிறார்கள்.