இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.
தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் மிக முக்கியமாக அமைந்தது.
குஜராத்தைச் சேர்ந்தவரான ஜடேஜா, பிரதமர் மோடியை முதல்முறையாகச் சந்தித்தது குறித்தும், அப்போது அவர் சொன்ன வார்த்தை குறித்தும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தனது ட்வீட்டில் ஜடேஜா, “மோடியை முதல்முறையாக 2010-ல் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சந்தித்தேன். அன்று அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் போட்டி.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணியினரும் மைதானத்தில் வரிசையாக நின்றனர்.
மோடி வந்து அனைத்து வீரர்களுடனும் கைகுலுக்கினார். அப்போதுதான் அவரை நான் முதல்முறையாகச் சந்தித்தேன்.
அப்போது கேப்டனாக இருந்த தோனி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
மோடி புன்னகையுடன் தோனியிடம், “அவரை பார்த்துக் கொள்ளுங்கள். அவர் எங்கள் பையன்” என்றார்.
அத்தகைய நிலையிலிருக்கும் ஒருவரிடமிருந்து, என் அணியின் முன் வந்த அந்த எளிய வார்த்தை, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைத்தது.
தன்னைச் சந்திக்கும் அனைவருக்கும் அவர் அளிக்கும் உண்மையான அரவணைப்பையும், தனிப்பட்ட அக்கறையையும் அது பிரதிபலித்தது.
நான் என்றும் மறக்க முடியாத தருணம் அது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக-வில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.