மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி: கே.எஸ்.அழகிரி கண்டனம்

Share

சென்னை: பிரதமர் மோடியின் தொழிலதிபர் நண்பர்கள், ஊடகத் துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்துத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி, ஊடகத்தையும் கபளீகரம் செய்யத் தொடங்கி விட்டார். ரூ.403.85 கோடி மதிப்புள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை பங்குதாரர்களின் விருப்பமின்றி கபளீகரம் செய்திருக்கிறது அதானியின் நிறுவனம். இதனை மிரட்டி வாங்கியதாகவும் பொருள் கொள்ளலாம்.

அதானிக்கு இவ்வளவு தைரியம் வருவதற்கு ஆட்சியாளர்கள் அவர் கையில் இருப்பதுதான் காரணம். பாஜவின் ஆசியோடு இன்றைக்கு ஊடகத்துறையிலும் அதானி ஊடுருவத் தொடங்கி விட்டார். இதேபோல், பிரதமர் மோடியின் மற்றொரு தொழிலதிபர் நண்பரான முகேஷ் அம்பானியும் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றை இப்படித் தான் கபளீகரம் செய்தார். அதானி குழுமமும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியும் தான் இன்று இந்தியாவைக் கூறு போடும் போட்டி நிறுவனங்களாக இருக்கின்றன. அதே சமயம் இந்த நிறுவனங்களின் தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பராக பிரதமர் மோடி இருப்பதையும் நாடு அறியும். ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்து விட்டு நான்காவது தூணான பத்திரிகைகள் மற்றும் ஊடகத்துறையிலும் கைவைத்துள்ளது ஆபத்தின் அறிகுறியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com