மைதானத்தில் நடந்ததை மைதானத்தோடு விட்டுவிடுவோம். இந்த பவுண்டரி லைனை கடந்துவிட்டால் நீயும் நானும் சகோதரன், நமக்குள் எந்த வெறுப்பும் கிடையாது என்பதுதான் அந்த கைகுலுக்கலுக்கான அடையாளம். மைதானத்தின் உள் நடக்கும் சண்டைகள் வெளியில் சென்ற பிறகு நீடிக்கக்கூடாது என்பது விளையாட்டின் அடிப்படை அறம். ஆனால், இப்போதோ மைதானத்துக்கு வெளியே இருக்கும் சண்டைகளும் அரசியலும் கூட மைதானத்துக்குள் தேவையில்லாத தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன.
கைகுலுக்கலின் உன்னதத்தையும் அர்த்தத்தையும் கம்பீரும் அறிவார். ஏனெனில், அவர் வீரராக இருந்தபோது அவரும் பலருடனும் சண்டையிட்டு, பின்னர் போட்டியின் முடிவில் கைகுலுக்கி சமாதானமாகியிருக்கிறார். ஒரு முன்னாள் வீரராக இருந்து பயிற்சியாளர் ஆகியிருந்தால் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாமென கம்பீர் கூறியிருக்கவே மாட்டார். அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்துவிட்டல்லவா பயிற்சியாளரானார்!
விளையாட்டு வீரர்களை விடுவோம்… நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியே, இந்தியா வெற்றி பெற்றதும், `மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர். இங்கும் இந்தியாவுக்கே வெற்றி’ என்கிறார். ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால்… மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் என போட்டு இருப்பாரா? எத்தனையோ பகை நாடுகள், விளையாட்டின் மூலம் இணைந்த சம்பவங்கள் இருக்கிறதே.
கிரிக்கெட், ஒரு விளையாட்டு. மைதானத்தில் மோதுபவர்கள் விளையாட்டு வீரர்கள். எல்லையில் மோதும் ராணுவ வீரர்கள் அல்ல.