ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினமான நேற்று காலை முதல் அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல்சேகரனின் நினைவிடத்தில் அவரது வாரிசுகள் மற்றும் இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செவ்வூரை சேர்ந்த மக்கள் நேற்று காலை முதலாவதாக அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, நவாஸ்கனி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

