ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்த மிகவும் முனைப்புடன் இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அவரைப் பொறுத்தவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களை அழைத்து வரக் கூடாது. அமெரிக்க மக்களுக்கே அந்த வாய்ப்புகளைத் அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கேற்ற மாதிரியான பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
அப்படியான அதிரடி அறிவிப்பில் ஒன்று தான், நேற்று வெளியிடப்பட்டுள்ள H-1B விசா பற்றிய அறிவிப்பு.
நாளை (செப்டம்பர் 21, 2025) முதல், வெளிநாடுகளில் இருந்து H-1B விசாவின் கீழ், பணியாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு 1 லட்சம் டாலர்களை செலுத்த வேண்டும். இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 88 லட்சம் ஆகும்.
இந்தத் தொகையை செலுத்தாமல், H-1B விசா அந்தஸ்தின் கீழ், நிறுவனங்கள் பணியாளர்களை அழைத்து வர முடியாது. அதாவது, அந்தப் பணியாளர்களை அமெரிக்க அரசாங்கம் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காது.
மேலும், இந்தத் தொகையை செலுத்தி அமெரிக்காவிற்குள் வரும் வெளிநாட்டு பணியாளர்கள் வெறும் 12 மாதங்களே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். அதன் பின், இந்த விசா நீட்டிக்கப்பட்டால் மட்டுமே, அந்தப் பணியாளர் அமெரிக்காவில் வேலையை தொடர முடியும்.