திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: பொங்கல் தொகுப்புக்கு கரும்பை இந்தாண்டு அரசு கொள்முதல் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோயிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி ரீதியான பிரச்னை தமிழத்தில் இன்னும் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
எனவே சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க வேண்டும். ஆதிதிராவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அதில் நிறைய ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி கண்டிப்பாக தொடரும்.