தூத்துக்குடி, சின்னக்கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சினக்கண்ணுபுரம் முட்புதரில் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் ஒரு திருட்டு பைக்கினை அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்திருக்கிறார். ஆனால், அந்த பைக்கின் உரிமையாளரான மற்றொரு சரவணன் என்பவர் பைக்கினை வாங்கிய சரவணனின் வீட்டிற்குச் சென்று எடுத்துச் சென்றுவிட்டாராம்.
இதனையடுத்து சரவணன், தன் தந்தை முருகனுடன் சென்று ஜெயக்குமாரிடம் ரூ.5,000 பணத்தைக் கேட்டிருக்கிறார். அப்போது சரவணனுக்கும், ஜெயக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. சரவணனும் அவரின் தந்தை முருகனும் சேர்ந்து ஜெயக்குமாரை அடித்து கீழே தள்ளியிருக்கின்றனர். இதில், அவர் உயிரிழந்துவிட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக சரவணன், அவரின் தந்தை முருகன் ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.