திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், தர்கா நிர்வாகிகள்.
இரு தரப்பும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக ஊடகங்களில் பேசியதால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலையில் என்ன நடக்கிறது? தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கோவில் மற்றும் தர்கா நிர்வாகிகள் கூறுவது என்ன?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் உள்ளது.
தர்காவுக்கு செல்லும் வழியிலேயே காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கான பாதையும் உள்ளது. இந்தநிலையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், குழந்தையின்மை பிரச்னை தீர்ந்ததற்காக தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்த வந்திருந்தார்.
ஆடு மற்றும் இரண்டு கோழிகளுடன் மலையின் மேல் செல்வதற்கு அவருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
”அனுமதி மறுப்பு குறித்து நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர், அது சிவன் மலை என்றும் அங்கு ஆடு, கோழிகளை வெட்டக்கூடாது என்று கூறினார்” என்கிறார் முன்பு பிபிசி தமிழிடம் பேசிய சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
”காலம்காலமாக ஆடு, கோழிகளைச் சமைப்பதற்கான பாத்திரம் அங்கே உள்ளதாக தெரிவித்தபோது அதற்கு ‘இங்கு இந்துக்கள் அதிகமாக உள்ளனர்’என்று மட்டும் வருவாய் கோட்டாட்சியர் பதில் அளித்ததார்” என்கிறார் அல்தாஃப்.
இதுதொடர்பாக, ஆய்வு நடத்துவதற்கு ராமநாதபுரம் எம்.பியும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ்கனி சென்றார். அவருடன் வந்தவர்கள் மலையில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரத்தை பாஜகவும் இந்து முன்னணியும் கையில் எடுத்தன. கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் ஊர்வலம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அறிவித்தது.
இதனால் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மதுரையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்தார். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தில் தற்போது என்ன நிலவரம் என்பதை அறிய களத்துக்கு சென்றது பிபிசி தமிழ்.
சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள சந்நிதி தெருவில் கடை வைத்திருக்கும் தங்கம் என்பவர், ”இப்போது வரை ஒற்றுமையாக இருக்கிறோம். சிவனை வணங்கப் போகும்போது தர்காவுக்கு ஊதுபத்திகளை கொண்டு செல்வோம்.” எனக் கூறினார்.
“தர்காவுக்கு அசைவம் கொண்டு போய் சாப்பிடும் வழக்கம் உள்ளதை கேள்விப்பட்டுள்ளோம். இது எப்படி பிரச்னையாக உருவானது எனத் தெரியவில்லை. உள்ளூரில் இரு தரப்பும் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்கிறார் கடை நடத்தி வரும் ரவி.
அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதா?
இப்பகுதியில் ஒரு சிலரை தவிர இதர கடைக்காரர்கள் பலரும் நம்மிடம் பேசுவதற்கு மறுத்தனர். இரு பிரிவினரும் ஒற்றுமையாக உள்ளதாக கூறுவதால் இந்து அமைப்பினரிடம் இருந்து பல்வேறு வழிகளில் மிரட்டல்கள் பெயர் கூற விரும்பாத சிலர் தெரிவித்தனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறார் இந்து முன்னணி அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளர் பிரசாந்த்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “யாரும் யாரையும் மிரட்டவில்லை. இந்து மக்களில் பலர் கடையை வைத்துள்ளனர். அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அதற்கான வேலையை செய்து வருகிறோம்” எனக் கூறுகிறார்.
“இது சிக்கந்தர் மலை என்பதாக மக்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மலைக்குச் செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. அசைவ உணவு சமைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்” என்கிறார் பிரசாந்த்.
எஸ்டிபிஐ உள்பட சில இஸ்லாமிய அமைப்புகளால் இந்த விவகாரம் பெரிதாக்கப்படுவதாகவும் பிரசாந்த் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை மறுக்கிறார் எஸ்.டி.பி.ஐ அமைப்பின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர். “இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையில் பிரச்னை ஏற்பட்டதால் அதைப் பற்றி விசாரிப்பதற்காக எஸ்.டி.பி.ஐ சென்றது. எங்களால் பிரச்னை தொடங்கியதாகக் கூறப்படும் முற்றிலும் தவறான தகவல்” என்கிறார்.
யாரால் பிரச்னை?
இதனை மறுத்துப் பேசும் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் ஜமாத் கமிட்டி உறுப்பினர் அபுதாஹிர், “இஸ்லாமிய அமைப்புகளால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. மலையில் நேர்த்திக்கடன் கொடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதியை மறுத்ததுதான் பிரச்னைக்குக் காரணம்” என்கிறார்.
சமீப நாட்களாக மலையை முன்வைத்து வாட்ஸ்ஆப்பில் போலி செய்திகள் பரப்பப்படுவதாக அபுதாஹிர் கூறினார்.
“இது கந்தர் மலை என்றால் கந்தர் மலை, சிக்கந்தர் மலை என்றால் சிக்கந்தர் மலை. இங்குள்ள மக்கள் யாரும் பிரித்துப் பார்க்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் இது திருப்பரங்குன்றம் மலை. அரசியல் ஆதாயத்துக்காக இதைப் பெரிதுபடுத்துகிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தர்காவில் என்ன நிலவரம்?
இதையடுத்து, மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு பிபிசி தமிழ் சென்றது.
மலையின் மேல் தர்காவுக்கு சொந்தமான நெல்லித்தோப்பு பகுதியில் இரண்டு போலீஸார் பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தனர். தர்காவுக்கு செல்வதற்காக கேரளாவைச் சேர்ந்த சில குடும்பங்கள் மலையில் ஏறிக் கொண்டிருந்தன.
”ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்பட்ட பிறகு தர்காவுக்கு வரும் கூட்டம் பெருமளவு குறைந்துவிட்டது” என்கிறார் தர்காவில் மந்திரம் ஓதும் பணியில் உள்ள இப்ராஹிம் அலிகான்.
சுமார் 40 ஆண்டுகளாக தர்காவில் பணிபுரிந்து வருவதாக இவர் கூறுகிறார். “மக்கள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். போர்வை, குத்துவிளக்கு, காணிக்கை ஆகியவற்றை செலுத்துவார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களும் இங்கு வருவார்கள்” எனக் கூறினார்.
குழந்தையின்மை, திருமண பாக்கியம் ஆகியவற்றுக்காக நேர்த்திக்கடன் கொடுத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தாக அவர் குறிப்பிட்டார்.
மலையை முன்வைத்து பிரச்னை எழுந்த பிறகு, காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதாகக் கூறும் இப்ராஹிம் அலிகான், “தர்காவுக்கு வரும் மக்கள் சாப்பாடு கொண்டு வந்தால் கறி, முட்டை இருக்கிறதா என சோதிக்கிறார்கள். தர்காவுக்கு வரும் கூட்டமும் பெருமளவு குறைந்துவிட்டது” என்கிறார்.
“பழையபடியே வழிபாடு தொடர வேண்டும் என விரும்புகிறோம்.” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தர்காவில் அசைவம் சமைத்த இடம், உணவு அருந்தும் இடம் ஆகியவற்றை அவர் சுற்றிக் காட்டினார்.
“வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சாப்பாடு கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் வாங்கி வரும் பொருட்களையும் திறந்து காண்பித்த பிறகே மலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்” என்கிறார் தர்கா நிர்வாகியான இப்ராஹிம் சிக்கந்தர்.
அப்போது உணவுப் பொருட்களை தூக்கியபடி தர்காவுக்கு வந்தார் சுமை தூக்கும் தொழிலாளியான ஜான் பாட்ஷா. அவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“அனைத்து சமூக மக்களும் இங்கு வருவார்கள். 25 வருடங்களாக ஆடு, கோழிகளை தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். இங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள்” என்கிறார்.
சமையல் பொருட்களைத் தூக்கி வரும் தங்களுக்கு 200 ரூபாய் வரை கூலி கிடைப்பதாகவும், இந்தப் பிரச்னைக்குப் பிறகு ஆடு, கோழிகளை கொண்டு வர முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரமணிய சுவாமி கோவிலின் தலைமை பட்டர் ராஜாவை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
“நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
இதே கருத்தையே பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சுப்ரமணிய சுவாமி கோவிலின் துணை ஆணையர் சூரிய நாராயணன். “மலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிகாரிகளான நாங்கள் எதுவும் பேசக் கூடாது” என்று கூறினார்.
நேர்த்திக்கடன் செலுத்த செல்வதை அதிகாரிகள் தடுத்ததாக தர்கா நிர்வாகிகளின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால் அவரிடம் இருந்து விளக்கம் பெற முடியவில்லை. ஆனால், கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ”திருப்பரங்குன்றம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். வெளியூரை சேர்ந்த இரு தரப்பு அமைப்பினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதியை பேணுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறியிருந்தார்.
”மலையைக் காப்பதற்கு அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக” கூறுகிறது இந்து முன்னணி.
“பழைய வழக்கப்படியே வழிபாடு தொடர வேண்டும்” எனக் கூறுகின்றனர் தர்கா நிர்வாகிகள்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதன் முடிவுக்காக இரு தரப்பினரும் காத்திருப்பதை பார்க்க முடிந்தது.
மலையில் ஆடு, கோழிகளை பலியிட்டு சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதே கோரிக்கையுடன் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, விக்டோரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றத்தில் பாகுபாடு இல்லாமல் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அரசு விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் ஆகியோர் வரும் மார்ச் 3 ஆம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.