- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் கோட்டை 400 ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கிறது. இந்தக் கோட்டை எதற்காக கட்டப்பட்டது?
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில், மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது துறைமுக நகரமான தரங்கம்பாடி. சங்க காலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கிய இந்தப் பகுதி பிறகு தனது முக்கியத்துவத்தை இழந்து, 16, 17ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முக்கியமான வர்த்தகத் துறைமுகமானது.
14ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தப் பகுதி சடங்கன்பாடி என அழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக தரங்கம்பாடியில் உள்ள மாசிலாமணிநாதர் கோவிலில் குலசேகர பாண்டியனின் 37வது ஆட்சியாண்டு (கி.பி. 1,305) கல்வெட்டு ஒன்று இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் ப. கலைச்செல்வன். “சடங்கன் பாடியான குலசேரன் பட்டினத்து உடையார் மணி வன்னீஸ்வர முடையார்க்கு” என்று தொடங்குகிறது அந்தக் கல்வெட்டு.
இதே கோவிலில் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரின் 1614ஆம் ஆண்டைச் சேர்ந்த முற்றுப் பெறாத கல்வெட்டிலும் ‘சடங்கன்பாடி’ என்றே இந்தப் பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கோட்டை கட்டப்பட்டதன் பின்னணி
இந்தியாவுடன் வணிகம் செய்வதற்காக டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் நிறுவப்பட்டது. அந்தக் கம்பெனி சார்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அட்மிரல் ஓவ்கிட்டி (Ove Guiddey), அப்போது தஞ்சையை ஆண்டுவந்த ரகுநாத நாயக்கருடன் (கி.பி. 1600-34) கி.பி. 1620ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டார்.
அதன்படி மொத்தம் 8 கி.மீக்கு 4 கி.மீ என்ற நீள, அகலம் கொண்ட இடத்திற்கு 3,111 ரூபாய் ஆண்டு வாடகை கொடுப்பதாக ஒப்பந்தமானது. அந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியின் அண்டைக் கிராமங்களில் இருந்து வரி வசூலிக்கும் உரிமை டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் ஓலை வடிவில் வெட்டப்பட்ட ஒரு தங்க தகட்டில் எழுதப்பட்டது. தற்போது இந்தப் பொன்னோலை, கோபன்ஹேகனில் உள்ள ராயல் ஆவணக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வணிக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டவுடன், கோட்டையைக் கட்டும் பணியைத் துவங்கினார் ஓவ் கிட்டி. 1620-இல் துவங்கிய இந்தப் பணி, 1654 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது என்கிறது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட “தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை : அகழ்வைப்பகக் கையேடு” என்ற நூல்.
டேனிஷ் கோட்டையின் தனிச் சிறப்புகள்
இக்கோட்டை டேனிஷ் பாணியில், பெரிய அரங்குகள், உயர் கூரைகளுடன் கட்டப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டிய இந்தக் கோட்டையின் நீளம் 60 மீட்டராகவும் அகலம் சுமார் 11 மீட்டராகவும் இருக்கிறது.
இந்தக் கோட்டை சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோட்டையின் முதல் சுற்றுக்கு வெளியில் பெரிய அகழி இருந்தது. இந்த அகழிக்கு வேண்டிய தண்ணீர் உப்பனாற்றில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த ஆற்றில் ஒரு கால்வாய் வெட்டி, கோட்டையின் தென்மேற்கு மூலையில் இருந்த மதகு வழியாக அகழியில் தண்ணீர் பாயும் படி செய்யப்பட்டிருந்தது. இந்த அகழியை அடுத்து பெரிய மதில் ஒன்றும் இருந்தது. இந்த வெளிமதில் தற்போதுள்ள அணிவகுப்பு மைதானத்தின் நடுப்பகுதியில் அமைந்திருந்தது. இந்த மதிலில் இருந்து கோட்டைக்குச் செல்ல பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
கி.பி. 1800ஆம் ஆண்டு இந்தக் கோட்டை திருத்தி அமைக்கப்பட்ட போது வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்த 16 அறைகளும் நான்கு மூலைகளில் இருந்த தாமரை மொட்டு போன்ற மதில் பகுதியும் அகற்றப்பட்டன. அப்போதுதான் கோட்டையின் மதில், சதுர வடிவமாக மாற்றி அமைக்கப்பட்டது.
கைதிகளை அடைக்க கிழக்கு – மேற்கு திசைகளில் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மரண தண்டனைக் கைதிகளுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைச்சாலையின் முதல் தளத்தின் மையத்தில் தூக்கு மேடை அமைக்கப்பட்டது. அதன் தரை தளத்தில் ஒரு கிணறு அமைக்கப்பட்டது. முதல் தளத்தில் கைதியின் கழுத்தில் தூக்கு கயிறு கட்டப்பட்டு, அவரது உடல் தரை தளத்தில் அமைந்துள்ள கிணற்றில் இறங்கும் வகையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மராட்டிய பாணியும், டேனிஷ் கட்டட கலைப் பாணியும் இணைந்த ஒரு கட்டடக் கலையை டேனிஷ் கோட்டையில் காண முடியும். கட்டிடத்தின் கூரைப் பகுதி நாயக்கர் கால மண்டப அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் முன்புறமுள்ள வசந்த மண்டபம், ஜன்னல், கதவுகள், கொடிக்கம்பம், மேடை, காவலர் மண்டபம் ஆகியவை டேனிஷ் பாணியில் கட்டப்பட்டிருக்கின்றன. கோட்டையின் முதல் தளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு புறச்சுவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கூம்பு வடிவங்கள் உள்ளன. இவை முற்றிலும் டேனிஷ் கட்டடக் கலையைச் சார்ந்தவை என விவரிக்கிறது இந்த நூல்.
கோட்டை கட்டப்பட்டது முதல் கி.பி. 1845ஆம் ஆண்டுவரை இந்தக் கோட்டையை 52 ஆளுநர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
கி.பி. 1801-இல் டேனிஷ் கோட்டையை பிரிட்டிஷார் நிலம் வழியாக முற்றுகையிட்டனர். 1815-இல் கடல் வழியாகவும் முற்றுகையிட்டனர். இதனால், டேனிஷ் கம்பெனியின் வணிகம் நஷ்டமடைய ஆரம்பித்தது. இதனால் கி.பி. 1845-இல் தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் சொத்துகள் அனைத்தும் பிரிட்டிஷாருக்கு விற்கப்பட்டன.
1845 முதல் 1860-ஆம் ஆண்டு வரை வரை இந்தக் கோட்டையின் முன்புறமுள்ள நாடார் மாளிகை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டது என்கிறது தரங்கம்பாடி அகழ் வைப்பகக் கையேடு.
இந்தியா சுதந்திரமைடந்த பிறகு, 1978ஆம் ஆண்டு வரை இந்தக் கோட்டை சுற்றுலாத் துறையின் ஆய்வு மாளிகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் இங்கே செயல்பட்டு வருகிறது.
1622 முதல் ஜான் ஆலஃப்சன் என்ற டேனிஷ் வீரர் தரங்கம்பாடியில் பணியாற்றினார். 1626ஆம் ஆண்டில் சில நினைவுக் குறிப்புகளை எழுதிவைத்தார். அதில். “இந்தியக் கொத்தனார்கள், ஐரோப்பியக் கொத்தனார்களைவிட சுறுசுறுப்பானவர்கள். மிகத் திறமையானவர்களாகவும் விளங்குகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தரங்கம்பாடியைப் பொருத்தவரை, இந்தக் கோட்டையைத் தவிர 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாசிலாமணிநாதர் கோயில், 1701ல் கட்டப்பட்ட சீயோன் தேவாலயம், 1718ல் கட்டப்பட்ட புதிய ஜெருசலேம் தேவாலயம், 1792ல் கட்டப்பட்ட நகர நுழைவாயில், 1784ல் கட்டப்பட்ட ஆளுநர் மாளிகை, கேட் ஹவுஸ், முகில் ட்ரூப் மாளிகை, போர்ட் மாஸ்டர் பங்களா, ரிகிலிங் மாளிகை என பல வரலாற்று முக்கியத்துவமுள்ள இடங்கள் இருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.