இதன்படி, தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், அவர்கள் வைப்பதுதான் சட்டம். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை- எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.
பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, 25 ஏக்கர் போதும் என்ற தளர்வு யாருக்காக? அரசு எதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது? தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் நிலைமை, அரசின் கவனிப்பு இல்லாமல் சீர்கெட்டுப் போயுள்ளது. அதைச் சரிசெய்யும் மனம் இல்லாமல், மௌனமாக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதற்குப் பதிலாக, எதிர்நிலையாக தனியாருக்கு உயர்கல்வியை வாரி வழங்கும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஏதோ ஆராய்ச்சி மேம்பாடு, கல்வி மேம்பாடு போன்றவற்றின் காரணமாக இந்த முன்வரைவை வைக்கிறோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வேலை.