பட மூலாதாரம், Getty Images
இறக்குமதி வரி தொடர்பான புதிய அறிவிப்புகள் வரவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி தொடர்பான அவரது அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வருகின்றன?
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதிவேகமாக இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததால் அதைப் பின்தொடர்வது கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், எஃகு, அலுமினியம் போன்றவற்றுக்கும், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலப் பொருட்களுக்கும் ஏற்கெனவே வரி விதிப்பை அறிவித்துள்ளார் டிரம்ப். கார்களுக்கான வரி விதிப்பு இந்த வாரத்தில் அமலுக்கு வருகிறது.
தற்போது டிரம்ப் மேலும் பல வரிகளை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த வரித் திட்டத்தை உருவாக்க டிரம்பின் குழு கடந்த சில வாரங்களாகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகை இந்த மொத்த நிகழ்வையும் (இறக்குமதி வரி விதிப்பதை) ‘லிபரேஷன் டே’ (சுதந்திர தினம்) என்று அழைக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாம் அறிந்து கொள்ளவேண்டியது முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்த வரிகள் எவ்வளவு அதிகமாக இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
வெள்ளை மாளிகை இந்த இறக்குமதி வரியின் உச்ச வரம்பு எவ்வளவு இருக்கும் என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் நிபுணர்கள் பலவிதமான வரி விகிதம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% வரை வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 முதல் 60% வரை வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் அவர்.
அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ‘பரஸ்பர வரி’ என்பதை அறிமுகம் செய்தார். அதாவது ஒவ்வொரு நாடும் அமெரிக்காவின் இறக்குமதிப் பொருட்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் இறக்குமதிப் பொருட்கள் மீது வரி விதிப்பது. இந்த வரி விதிப்பு விகிதம் நாட்டுக்கு நாடு மாறுபடும்.
“அவர்கள் நமக்கு வரி விதித்தால், நாம் அவர்களுக்கு வரி விதிப்போம்,” என்று பிப்ரவரியில் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த பரஸ்பர வரி குறித்த திட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு முன்பு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை உடனடியாகச் சிக்கலாக்கியது. அதிகாரிகளின் பரிந்துரைகள் இறக்குமதி வரிகளில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது, இது அமெரிக்க வர்த்தகத் துறையில் நியாயமற்றதாகக் கருதப்படும் மதிப்புக் கூட்டு வரி (VAT) உள்ளிட்ட பல வர்த்தகக் கொள்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டது.
பட மூலாதாரம், Reuters
வர்த்தகம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த வரியின் உச்ச வரம்பு எவ்வளவு இருக்கும் என்று சிந்திக்கத் துவங்க, இந்த அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்று வெளியாகவுள்ள அறிவிப்பானது எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வரியிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஐரோப்பிய அதிகாரிகள், தங்கள் நாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை இரட்டை இலக்கமாக வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே டிரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர வரி விதிப்பால் எந்த நாடுகள் பாதிக்கப்படலாம்?
இந்த வரி விதிப்பால் எந்த நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, புதிய வரி விதிப்புகள் “அனைத்து நாடுகளுக்கும்” பொருந்தும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இது பிரசாரத்தில் இறக்குமதிகள் மீதான பொதுவான வரி என்று அவர் கூறியதைக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்தது.
இந்த விவகாரத்தில், தாங்கள் தவிர்க்கப்படலாம் என்று பெருமூச்சு விட்ட பிரிட்டன் போன்ற நாடுகளின் நம்பிக்கையைத் தகர்த்தது. இருப்பினும், சில நாடுகள் ஒருவித ஒப்பந்தத்தை உருவாக்க இயலும் என்று நம்புகின்றன.
ஆனால், இந்த வரிகள் எந்த அளவுக்கு உலகளவில் பொதுவாக அமல்படுத்தப்படும் அல்லது எந்த நாடுகள் மீது இதன் இலக்கு இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த மாதம், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் பெரும்பகுதியைக் கொண்ட 15 சதவீதம் நாடுகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதகமாக இருக்கும் வகையில் வரிகளை விதிக்கும் நாடுகள் மீது கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், அதற்கான பரிந்துரைகளை உருவாக்கத் தயாரானபோது, “அந்தப் பட்டியலின் கீழ் வரக்கூடிய நாடுகளை” அடையாளம் கண்டது.
அவை, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன் மற்றும் வியட்நாம்.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள் அல்லது முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகளாகக் கருதப்படும் சில நாடுகளை டிரம்ப் சமீப காலங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
உண்மையில் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளைக் கையாள்வதைவிட சில நேரங்களில் இந்த “நண்பர்களை” கையாள்வது கடினமாக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் விதிக்கும் வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
சுங்க வரி என்பது வேறு நாட்டில் இருந்து ஒரு நாடு இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது. ஆகவே, இங்கிருக்கும் பெரிய கேள்வி என்னவெனில், இந்த வரிப் பணத்தை யார் செலுத்துவார்கள்?
இதற்கு ஓர் எளிய பதில் உள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த வரியை எதிர்கொள்கின்றன. குறிப்பாக இந்த வரிகளை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செவ்வாய்க்கிழமையன்று பரிந்துரைத்தபடி வெள்ளை மாளிகை “உடனடியாக” விதிக்கத் தொடங்கினால், இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்களே அதை ஏற்க வேண்டியிருக்கும்.
ஆனால், வரிகள் அதிகமாக இருந்தால், விநியோகஸ்தர்களை மாற்றுவதன் மூலமோ, வர்த்தக கூட்டாளிகளைச் சுமையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ, அமெரிக்காவில் அந்தப் பொருட்கள் மீதான விலைகளை உயர்த்துவதன் மூலமோ அந்தச் செலவுகளை ஈடுசெய்வதற்கான வழிகளை நிறுவனங்கள் தேடும்.
பல நிறுவனங்கள் ஏற்கெனவே அந்த நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளன. ஆனால், இதுவொரு ஆபத்தான விளையாட்டு. ஏனெனில், நிறுவனங்கள் விலைகளை அதிகமாக உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் அதை வாங்குவதைக் குறைத்துக்கொள்ள நேரிடும்.
இது, அமெரிக்காவில் மட்டுமின்றி விற்பனைகளுக்காக அதைச் சார்ந்திருக்கும் பிற நாடுகளிலும் பொருளாதார மந்தநிலைக்கு வித்திடலாம். உலகளவில் பல தொழில்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களைச் சார்ந்துள்ளன. இந்நிலையில், இதன் தாக்கம் அவையனைத்தின் மீதும் இருக்கும்.
இந்நிலையில், வரிகளைத் தவிர்க்க விரும்பும் நிறுவனக்கள் அமெரிக்காவில் தங்கள் தொழிலைச் செய்துகொள்ளலாம் என்று டிரம்ப் கூறுகிறார். ஆனால் அது உடனடித் தீர்வாகவோ எளிதான ஒன்றாகவோ இருக்காது. ஏனெனில், வேலையாட்களைப் பணியமர்த்துதல், தொழிற்சாலைகளை அமைப்பதற்கான அதிக செலவுகள் ஆகியவற்றிலும் சவால்கள் இருக்கும்.
அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான நாணய மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள், பிற நாடுகள் முன்னெடுக்கும் பதிலடி நடவடிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், உலகளாவிய வர்த்தக விதிகளை மாற்றக்கூடிய டிரம்பின் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கணிப்பது மிகவும் கடினம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு