இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது.
இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார்.
இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்.
நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
மேலும் தனியார் ஊடகத்திடம், “அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும்.
தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார்.
இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.