இரான் பெண்களின் உரிமைக்காக அந்நாட்டின் அரசை எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர், நர்கேஸ் முகமதி.
வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

இவர் சிறையில் இருக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பாரிஸில் இருக்கும் முகமதியின் டீனேஜ் பிள்ளைகள் அலி, கியானா மற்றும் முகமதியின் கணவர் தகி ரஹ்மானி டிசம்பர் 10 அன்று பெற்றுக் கொண்டனர்.
இந்த விருது நார்வே ஓஸ்லோவின் சிட்டி ஹாலில் வழங்கப்பட்டது. விழாவில் ஒரு நாற்காலி நர்கேஸ் முகமதிக்காக காலியாக விடப்பட்டது. அந்த நாற்காலியில் முகமதியின் உருவப்படம் காட்டப்பட்டது.
122 ஆண்டுக்கால அமைதிக்கான நோபல் பரிசு வரலாற்றில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இந்த விருதைப் பெறும் ஐந்தாவது நபர் முகமதி என்று கூறப்படுகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தாயைக் கடைசியாகப் பார்த்த கியானா கூறுகையில், `ஒருவேளை நான் என் அம்மாவை 30 அல்லது 40 ஆண்டுகளில் பார்க்கலாம். ஆனால், நான் அவரை மீண்டும் பார்க்க மாட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் என் அம்மா எப்போதும் என் இதயத்திலும் என் குடும்பத்திலும் வாழ்வார்.
`இரானிய மக்கள் தங்கள் விடாமுயற்சியின் மூலம் தடைகளையும் சர்வாதிகாரத்தையும் அகற்றுவார்கள்’ எனச் சிறையின் உயரமான குளிர்ந்த சுவர்களுக்குப் பின்னால் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் என்று கூறி இருக்கிறார்.

முகமதியின் மகன் அலி, `சிறுவயதிலிருந்தே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அவரை மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாங்கள் அவரை மீண்டும் பார்க்கவில்லை என்றால், நாங்கள் எப்போதும் அவரை பற்றி பெருமைப்படுவோம், மேலும் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்’ என்றார்.
முகமதியின் கணவர் தகி ரஹ்மானி, `அவரின் நிலைமை மிகவும் கடினமாக இருந்தாலும் கூட, இந்த விருது அவருக்குப் பெரிய குரலைக் கொடுக்கும்.
இது ஓர் அரசியல் பரிசு; எனவே நர்கேஸ் மீது அதிக அழுத்தம் இருக்கும். ஆனால், அதே நேரத்தில் இது மக்களின் குரலை எதிரொலிப்பதற்கான இடத்தை உருவாக்கப் போகிறது’ என்றார்.
போரட்டம் வெற்றி பெறட்டும்!