சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா பங்கேற்பாரா? – இறுதி முடிவை இன்று எடுக்கிறது தேர்வுக்குழு | Selection committee to decide today on bumrah participating in champions trophy

Share

அகமதாபாத்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தேர்வுக்குழுவினர் இன்று (பிப். 11-ம் தேதி) எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் அவர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்திருந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அதன் பின்னர் அவர், எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. காயம் முற்றிலும் குணமடைவதற்கு 5 வார காலம் ஓய்வு தேவை என இந்திய அணியின் மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்தே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை.

எனினும் ஒருநாள் போட்டி தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் ஓய்வு மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே பும்ரா களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்கேன் பரிசோதனை முடிவு தொடர்பாக பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவினர் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக முறைப்படி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ள கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்கக்கூடும் என நம்பப்பட்ட நிலையில், அவர் அவசரமாக பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்துக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக்குழுவினர் இன்று அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ராணா சேர்க்கப்படலாம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாதியில் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தால், 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் தொடரக்கூடும். ஒருவேளை அதன் பிறகும் பும்ரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் ஐசிசி-யின் தொழில் நுட்ப குழுவின் ஒப்புதலை பெற்று மாற்று வீரரரை அணியில் சேர்க்கலாம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com