சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி பரிசு – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு | Champions Trophy prize money: ICC unveil bumper package

Share

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.59.90 கோடியாகும். இது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் (சுமார் ரூ.60 கோடி) அதிகமாகும். இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெறும். அரை இறுதி சுற்றில் தோல்வியை சந்திக்கும் அணிகளுக்கு தலா ரூ.4.86 கோடி கிடைக்கும்.

இதுதவிர லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு தலா ரூ.29.50 லட்சம் வழங்கப்படும். 5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.04 கோடியும் 7, 8-வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1.21 கோடியும் கிடைக்கும். மேலும் தொடரில் கலந்து கொள்வதற்காக 8 அணிகளுக்கும் தலா ரூ.108 கோடி வழங்கப்பட உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. இதன் பின்னர் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவில்லை. சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com