சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்டின் கப்தில் தெரிவித்துள்ளார். 38 வயதான அவர் கடைசியாக கடந்த 2022-ல் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி இருந்தார்.
13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 198 ஒருநாள் போட்டிகள், 122 டி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 13,463 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக கப்தில் அறியப்படுகிறார். அதில் மட்டும் 3,531 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 7,346 ரன்கள் எடுத்துள்ளார். 39 அரை சதங்கள் மற்றும் 18 சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார். கடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வெலிங்டன் மைதானத்தில் 237 (நாட்-அவுட்) ரன்களை எடுத்திருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் அது. மேலும், உலகக் கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்களாகவும் அது அறியப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் டி20 லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சக அணி வீரர்கள், தன் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பையும் – தோனி ரன் அவுட்டும்: கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரை சதம் மட்டுமே கப்தில் பதிவு செய்திருந்தார். இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனியை டைரக்ட் ஹிட் மூலம் ஸ்டம்புகளை தகர்த்து அவர் ரன் அவுட் செய்தார். அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களை நொறுங்க செய்தது. அதன் மூலம் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.