சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் influencer சொல்வதைக் கேட்டு சருமப் பராமரிப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
நாகரிகம் மிக்க இக்காலத்தில், அழகு சாதனப் பொருள்களின் தேவை மிக இன்றியமையாதது. இன்றைய டிஜிட்டல் யுகத்தின் உதவியால் அழகு சாதனத்துறையானது இன்னும் வலுபெற்றுள்ளது. அதே நேரம், சமூக வலைதளங்களில் அழகுக்கலை குறிப்பாக சருமப் பராமரிப்பு தொடர்பான பல தவறான தகவல்களால் மக்கள் வழி நடத்தப்படுவதாக, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
சருமப் பராமரிப்பு நடைமுறையாகட்டும், ரெட்டினாய்டுகள் மற்றும் மருந்து போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதாகட்டும் முதலில் மக்கள் தங்களுக்கு என்ன வகையான சருமப் பிரச்னை உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சரும நல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டுமென்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புதுடெல்லியில் உள்ள ஸ்கின் கியூர் கிளினிக்கின் (SkinQure Clinic) சரும மருத்துவர் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பி.எல். ஜாங்கிட் கருத்துப்படி, “சருமப் பராமரிப்பில் முதலில் சருமத்தின் வகையைப் புரிந்து கொள்வதே முதன்மையானதாக இருக்க வேண்டும். மோசமான சருமப் பிரச்னை என்பது, சிறுநீரக பிரச்னை அல்லது கல்லீரல் பிரச்னைகளுக்குச் சமம்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், இன்ஃப்ளூயன்சர் ஆக உள்ளவர்களின் சரும ஆலோசனைகளைப் பின்பற்றுவது தவறானது. இது தவிர்க்கப்பட வேண்டும். மக்கள் திரையில் பார்க்கும் நபர் பயன்படுத்தும் அதே தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதற்கு பதிலாக அவர்கள், தகுந்த வழிகாட்டும் மற்றும் மருந்துகளை வழங்கக்கூடிய சரும நல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.