ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 27-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.
ஹைதராபாத் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த முடிவு சரி என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் செயல்பட்டனர். முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தனர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். பிரியான்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங், 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது பஞ்சாப். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் அதிரடி காட்டினார் ஸ்ரேயாஸ் ஐயர். நேஹல் வதேரா 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஷஷாங்க் மற்றும் மேக்ஸ்வெல் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை அவர் விளாசினார். ஸ்டாய்னிஸ் 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். மொத்தம் 16 சிக்ஸர்களை பஞ்சாப் அணி விளாசி இருந்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. 246 ரன்கள் இலக்கை ஹைதராபாத் அணி விரட்டி வருகிறது. இந்த இலக்கை எட்டும் அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.