கோவை: கோவையில் முதல் முறையாக புரோ பாக்சிங் குத்துச் சண்டை போட்டி நாளை (மார்ச் 4) நடைபெற உள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், குத்துச்சண்டை மேலாண்மை தலைவருமான ராயன் கூறியதாவது: தென்னிந்திய அளவிலும், கோவையிலும் குத்துச் சண்டைக்கு அவ்வளவாக நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. பயிற்சிக்கும், வழிகாட்டுதலுக்கும் சரியானதளம் இல்லை. குத்துச்சண்டை வீரர்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
எங்களது நோக்கம், குத்துச்சண்டை வீரர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு சர்வதேச அளவில் சண்டையிட வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்பதே. கோவையில் முதல் முறையாக தொழில்முறையிலான குத்துச்சண்டை நிகழ்ச்சியை இந்திய பாக்ஸிங் கவுன்சில் அனுமதியோடு நடத்துகிறோம்.
பஞ்சாப், ஹைதராபாத், டெல்லி, ஆந்திரபிரதேசம், ஜார்க்கண்ட், மும்பை, பெங்களூரு, சென்னை, கோவா, மணிப்பூர், ஹரியானா மற்றும் கோவையிலிருந்தும் வீரர்கள் பங்கேற்கின்றனர். தற்போது கோவையில் 7 வீரர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்க தயாராகியுள்ளனர். இந்த போட்டியானது கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஹாஷ் 6 ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்வாறு ராயன் தெரிவித்தார்.