உலகம் உருண்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தொடங்கிய இடத்துக்கே அது மீண்டும் வந்துள்ளது.
2020-ம் ஆண்டு உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மெள்ள கொண்டு வரத் தொடங்கியது கொரோனா வைரஸ். 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்பட்ட அலைகள் உலக அளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்ததோடு, லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகளின் வரவாலும், ஏற்கெனவே நோய் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியாலும், வைரஸின் வீரியம் குறைந்து காணப்பட்டதாலும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை மெள்ள குறையத் தொடங்கியது.
2022-ம் ஆண்டு தொடங்கியபோதே இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் பரவலாகக் காணப்பட்டது. இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா மற்றும் புதிய வரவான ஒமிக்ரான் வேரியன்ட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, பலமுறை உருமாறிய ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியது. ஒமிக்ரானுக்கு பரவும் தன்மை அதிகமாக இருந்ததால் பிற வேரியன்டுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.