கில், ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பான ஆட்டம்: இந்தியா வெற்றி | IND vs ENG 1st ODI | shubman Gill Shreyas Axar lead India to victory in first ODI versus england

Share

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பேட் செய்து அரை சதம் கடந்து அணியை வெற்றி பெற செய்தனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் துணை கேப்டன் பிலிப் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். கேப்டன் ஜாஸ் பட்லர் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் ஜாக்கப் பெத்தேல் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷமி, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். சால்ட் ரன் அவுட் ஆனார்.

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இன்னிங்ஸை ஓபன் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த அக்சர் படேல் உடன் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கில். 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அக்சர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கே.எல்.ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஷுப்மன் கில் வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவும் அணியை வெற்றி பெற செய்தனர். 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஷுப்மன் கில் வென்றார். மூட்டு வலி காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அடுத்தப் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com