தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர்தூவி ;அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா, `இன்னும் 100 நாள்களில் அ.தி.மு.க என்கிற கட்சியே இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “ஆறாம் ஆண்டு நினைவு நாளில் சர்ச்சை இருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்டுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையும் இப்போது இருக்கின்ற அரசாங்கம் எடுக்கவில்லை. அவர்களோட இழப்பு ஈடு செய்ய முடியாதது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அ.தி.மு.க பிளவுபட்டிருப்பது ஒன்றும் புதிதல்ல. அத்தையோட மறைவுக்கு அப்புறம் அந்தக் கட்சியில் ஒற்றுமை இல்லாமல்தான் இருக்கிறது. நாலு அணிகள் இல்லை, நான்கு பேர்தான் இருக்கிறார்கள். அந்த நாலு பேரும் அ.தி.மு.க-விலேயே இல்லை. அதில் இருக்கிறவர்கள் எல்லோருமே நீக்கப்பட்டவர்கள். இப்போது அது கட்சியே இல்லை. 100 நாள்கள்கூட இருக்குமா என்று தெரியவில்லை” என்றார்.
மேலும், அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு `இல்லை’ என்று கூறிய தீபா, “இந்த கட்சியினால் நான் முடிவு எடுக்கவில்லை, ஒட்டுமொத்த அரசியலும் எனக்குப் பிடிக்கவில்லை. எங்க அத்தை, அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் இந்த கட்சிக்காகத் தியாகம் செய்திருக்கிறார். ஆனால் அவங்களோட மறைவை கண்டுபிடிக்கக்கூட எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், எந்தவொரு அடியும் எடுத்துவைக்காமல் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் இந்த கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். உண்மையான அக்கறையோடும், பாசத்தோடும் யாரும் இல்லை. அதுதான் நான் வெறுக்கக் காரணம். ஜெயலலிதா மரணத்திலும், சசிகலாவின் தவறு இருக்கிறது” என்றார்.