துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று பிற்பகலில் மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்றது. இரவு அவர்கள் துபாய் சென்றடைந்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், அக்சர் படேல், முகமது ஷமி, ஹர்ஷித் ராணா, ஷுப்மன் கில், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், குல்தீவ் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் பயணித்தனர். எஞ்சிய சில வீரர்கள் விரைவில் இந்திய அணியுடன் இணைய உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூஸிலாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என முழுமையாக வென்ற நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது.