ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன் என்கிறார், பேராசிரியர் விமலா.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியத்தை மேம்படுத்த, அம்மொழிகளின் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்கள் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது போல, இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இலக்கியம் சார்ந்த விருதுகளில் உயரிய விருதாகக் கருதப்படும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, இந்த ஆண்டு 21 இந்திய மொழிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் மொழிக்கு விமலா தேர்வு தேர்வாகியுள்ளர். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
மலையாள மொழியில் நளினி ஜமிலா என்ற எழுத்தாளரின் படைப்பில் வெளியான `எண்ட ஆண்கள்” என்ற நூலை தமிழில் `எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் விமலா மொழி பெயர்த்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியுள்ள விமலா, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நான்கு நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.