இதோ இப்போது இறுதிப்போட்டி. சாம்சன் தொடர்ச்சியாக சொதப்பி அணியிலிருந்து டிராப் ஆக காரணமாக இருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக. மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பார்த்து டிபன்ஸ் ஆடியிருந்தார். 5 வது பந்தை லாங் ஆனின் தலைக்கு மேல் அடித்து சிக்சராக்கியிருப்பார். அவ்வளவுதான், அதற்கு மேல் அவர் அவுட் ஆகும் வரை எந்தத் தடையும் இல்லை. சாம்சனின் இருத்தல் அபிஷேக்குக்கும் உதவியாக இருந்தது. சாம்சன் க்ரீஸில் இருந்ததால் ஸ்பின்னரான க்ளென் பிலிப்ஸை ஒரே ஓவரோடு கட் செய்தார் சாண்டனர். இது அபிஷேக்குக்கு பேருதவியாக இருந்தது.
பவர்ப்ளேயை அபிஷேக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். அவர் அவுட் ஆன பிறகு மிடில் ஓவர்களில் இஷான் கிஷனோடு சேர்ந்து அதிரடியை தொடங்கினார் சாம்சன். அவரின் அதிரடிக்கு நியூசிலாந்து வீரர்களிடம் எந்த பதிலும் இல்லை. 16 வது ஓவரில் நீஸமின் பந்தில் 89 ரன்களில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
சாம்சன் நினைத்திருந்தால் கடைசி வரை நின்று சௌகரியமாக சதத்தை எட்டியிருக்க முடியும். ஆனால், அணியின் நலன்தான் அவருக்கு பிரதானம். அதனால்தான் அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ரிஸ்க் எடுத்து ஆடினார். சாம்சன் அடித்த இந்த 89 ரன்கள்தான் டி20 உலகக்கோப்பையில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். சாம்சனை இனியும் இரண்டாம்பட்சமாக அணி நிர்வாகம் அணுக முடியாது.