பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“மக்களின் ஆணையை நான் மதிக்கிறேன். இமாச்சல பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் ஒவ்வொரு நகர்விலும் அவர்களுடைய ஆதரவைப் பெற்றதற்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
“எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதிப்படும் தருவாயில் உள்ளன. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இமாச்சல பிரதேச மக்களுக்கும் குறிப்பாக வாக்காளர்கள் தேர்தல் பணியில் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தச் சம்பவமும் நடக்காமல், மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்த முறை இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த மாநிலத்தின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இயற்கையாகவே அந்தப் பெருமை மரியாதைக்குரிய மோதிஜியையே சேரும்.
மதிப்புற்குரிய தேசியத் தலைவருக்கும் அமித் ஷாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசாங்கம் அமையும், அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இமாச்சல பிரதேசம் முன்னேறும் வகையில் நமது ஒத்துழைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டு எப்போதும் உயரும். இமாச்சல பிரதேசத்தின் நலன்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்றால், சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்,” என்று தெரிவித்தார்.
இறுதியாக, “சிறிது நேரத்தில் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவுள்ளேன்,” எனத் தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பு கிடைத்தாலும், வாக்கு சதவீதத்தில் பாஜகவுடன் கடும் போட்டி
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் பொறுப்பாளருமான ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் கட்சியின் வெற்றிக்கு ப்ரியங்கா காந்தி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, சோனியா காந்தியின் ஊக்கம் மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகிய அம்சங்கள் காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இமாச்சல பிரதேசத்தில் ஆபரேஷன் தாமரை குறித்த அச்சம் இல்லை. அவர்களால் இங்கு எதையும் பெரிதாகச் செய்ய முடியாது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நாங்கள் எளிதாக ஆட்சி அமைப்போம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது,” என்று கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 39 இடங்களிலும் பாஜக 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இமாச்சல பிரதேசத்தின் வாக்குப் பங்கீட்டில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலையில் இருந்தாலும், இதுவரை 43.97 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளன. அதேவேளையில், பாஜக 26 இடங்களோடு பின் தங்கியிருந்தபோதிலும் 42.87 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இவை போக 10.4 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளின் கணக்கில் பதிவாகியுள்ளன.
“பாஜகவால் எதையும் செய்ய முடியும்”
இமாச்சல பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆனால், அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்படலாம் என்ற அச்சமும் தோன்றத் தொடங்கின.
இதுகுறித்து கட்சித் தலைவர்களும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். அங்கு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை அம்மாநிலத்தை விட்டு வெளியே அனுப்புவது குறித்து ஊகங்களும் தொடங்கின.
முன்னதாக, காங்கிரஸ் தலைவரும் சத்தீஸ்கர் முதலமைச்சருமான பூபேஷ் பாகேலும் பாஜகவால் எதையும் செய்ய முடியும் என்பதால் காங்கிரஸ் சகாக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், “அவர் மீது இருக்கும் பொதுக்கருத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவருடைய வேலை,” எனக் கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் அவதானிப்பாளராக பூபேஷ் பாகேல் உள்ளார். அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசியபோது,” எங்கள் அரசாங்கம் அமைக்கப்படும் என்று நாங்கள் நம்பினோம். அது நடக்கிறது. பாஜகவால் எதையும் செய்ய முடியும் என்பதால், கூட்டணி கட்சிகளை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
இதனுடன், முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் தனது தாயும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான பிரதீபா சிங்கும் உள்ளார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின்படி, தற்போது காங்கிரஸ் 38 இடங்களிலும் ஆளும் பாஜக 26 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: