இவ்வாறிருக்க, பி.சி.சி.ஐ செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அணிக்கு ரூ. 51 கோடி பரிசுத்தொகை அறிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய தேவஜித் சைகியா, “இந்த நேரத்தில் ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும்.
ஏனெனில், இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத் தொகையை உயர்த்தினார். சுமார் 300 சதவிகிதம் உயர்ந்தது.
டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதில் பி.சி.சி.ஐ மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.
எனவே, ஐ.சி.சி-யின் பரிசுத்தொகை மட்டுமல்லாது, பி.சி.சி.ஐ தனியாக ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்போகிறது. இந்தத் தொகையானது, வீராங்கனைகள், அணித் தேர்வாளர்கள், தலைமைப் பயிற்சியாளர் அமோல் முசும்தார் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்குச் செல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இவை மட்டுமல்லாது, சூரத் வைர வியாபாரியான ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், மாநிலங்களவை உறுப்பினருமான கோவிந்த் தோலாகியா, சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொருவருக்கும் வைர நகை மற்றும் சோலார் பேனல் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 2024-ல் ஆடவர் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்குப் பி.சி.சி.ஐ ரூ. 125 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.