பாகிஸ்தானும் அதையேத்தான் செய்து கொண்டிருக்கிறது. தங்களின் ஹாக்கி அணிகளை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் என பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒன்று இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
‘மக்களை இணைக்கும் விளையாட்டு…’
1999 சென்னை டெஸ்ட் அனைவருக்கும் இன்றைக்கும் நியாபகமிருக்கும். இந்திய அணியை தோற்கடித்து பாகிஸ்தான் வென்ற போது, அந்த அணியாக நன்றாக ஆடியதென எழுந்த நின்று கைத்தட்டிய ரசிகர் கூட்டம் இங்கே இருக்கிறது.
2023 இல் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்திருந்தது. அப்போது பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் ஆதரவிலும் இங்கிருக்கும் நிர்வாகிகளின் உபசரிப்பிலும் அவர் நெகிழ்ந்து போயிருந்தார்.
பாகிஸ்தானிலும் தோனிக்கும் கோலிக்க அத்தனை ரசிகர் கூட்டம் இருக்கிறது. இடையில் நிற்கும் அரசுகள்தான் அரசியல் லாபத்துக்காக விளையாட்டின் மீது கொடிய கரங்களை பரப்பியிருக்கின்றன.
விளையாட்டு பேதங்களை மறக்கடிக்கும் சக்தியை கொண்டது. விளையாட்டின் வழி சகோதரத்துவத்தை முன்னெடுக்க இயலும். விளையாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கான கருவி. இதையெல்லாம் விடுத்து அரசியலுக்காக மட்டுமே கிரிக்கெட்டை பயன்படுத்துவோமென்றால், இருதரப்பிடமும் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. இதுதான் உங்கள் தேசப்பற்றா?