பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின் கேப்டன்களும் டாஸுக்காக மைதானத்திற்கு வந்தபோது, போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் கைகுலுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் அணி குற்றம் சாட்டியது.
இது குறித்து ஐசிசி-யிடம் புகார் அளித்த பாகிஸ்தான், போட்டி நடுவர் நீக்கப்படாவிட்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாகவும் கூறியது.
“செப்டம்பர் 14 அன்று நடந்த சம்பவம் ஒரு தவறான புரிதலால் ஏற்பட்டது, அதற்காக ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“செப்டம்பர் 14 போட்டியின் போது நடந்த நடத்தை விதி மீறல் குறித்து விசாரிக்க ஐசிசி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது” என்றும் பிசிபி கூறியது.
தாமதமாக தொடங்கிய பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், புதன்கிழமை ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான நாக் அவுட் போட்டி தாமதமாக தொடங்கியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ‘கைகுலுக்கல் ‘ சர்ச்சை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
ஆசிய கோப்பை தொடரில் புதன்கிழமை மாலை பாகிஸ்தான் அணி திட்டமிட்ட நேரத்திற்குள் மைதானத்தை அடையாததால், பல்வேறு ஊகங்கள் கிளம்பத் தொடங்கின.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசிக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா மற்றும் நஜாம் சேத்தி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போட்டி திட்டமிட்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில நல்ல செய்திகள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இதையடுத்து, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி இன்ஸ்டாகிராமில், “துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு செல்லுமாறு நாங்கள் (பாகிஸ்தான்) அணியைக் கேட்டுக்கொண்டோம்” என்று பதிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.

பயிற்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் தோல்வியையும் மற்றொரு போட்டியில் வெற்றியையும் கண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்தது குறித்து நிறைய விவாதங்கள் தொடங்கின.
கிரிக்கெட் செய்திகள் வெளியிடும் வலைத்தளமான cricinfo-ல் , ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான நாக் அவுட் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் வீரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பயிற்சியை மேற்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் செவ்வாய்க்கிழமை, ” ஆசிய கோப்பையில் விளையாடுவது குறித்து வாரியம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
‘கைகுலுக்குவது’ தொடர்பாக எழுந்த சர்ச்சை
பட மூலாதாரம், Reuters
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடங்கியபோதும், அதன் பிறகும் இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கவில்லை.
டாஸ் நேரத்திலும் கூட, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகிய இருவரும் கைகுலுக்கவில்லை.
டாஸ் போடும் போது ‘கைகுலுக்க வேண்டாம்’ என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் கேப்டன்களிடம் கூறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதற்காக பாகிஸ்தான் அணி, போட்டி நடுவரை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐசிசியிடம் புகார் கொடுத்தது.
இந்த விவகாரத்தில் ஐசிசி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் ஊடகங்களில் வந்த சில செய்திகள் படி, பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
“போட்டி நடுவர், ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் எம்சிசி கிரிக்கெட் சட்டங்களை மீறியதாக புகார் அளித்துள்ளோம். நம் நாட்டின் கௌரவத்தை விட எனக்கு வேறொன்றும் முக்கியமில்லை,” என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக, டாஸ் போடும் போது இரு அணிகளின் கேப்டன்கள் கைகுலுக்குவது, போட்டி முடிந்ததும் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவது என்பது ஒரு பழமையான மரபு.
கொரோனா காலத்தில் மட்டும் சிறிது காலம் இது நிறுத்தப்பட்டது. அதைக்கடந்து, தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் என்ன சொன்னார்?
பட மூலாதாரம், Getty Images
போட்டி முடிந்த பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கைகுலுக்காதது குறித்து கேட்கப்பட்டபோது “சில விஷயங்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை விடப் பெரியவை” என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இதற்கிடையில், இந்திய கேப்டனோ அல்லது அணியோ கைகுலுக்காமல் எந்த விதியையும் மீறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) அதிகாரி ஒருவர், (அவர் பெயர் வெளியிட விரும்பவில்லை) பிடிஐ செய்தி நிறுவனத்திடம், போட்டிக்குப் பிறகு கைகுலுக்கப்படுவது வெறும் “நல்லெண்ண சைகை தான்” என்று கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “விதிமுறைகள் புத்தகத்தில் எதிரணியுடன் கைகுலுக்க வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகளில் பாரம்பரியமாக நடப்பது தான், ஆனால் இது விதி அல்ல” என்றார்.
மேலும், “சட்டமே இல்லையென்றால், கைகுலுக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. குறிப்பாக, பழைய பிரச்னைகளும் மோசமான உறவுகளும் இருந்த எதிரணியுடன் கைகுலுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை”என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு