சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.
இந்த தொடரின் 5-வது போட்டி கடந்த ஜுலை 28-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து டிம் டேவிட் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த போட்டியில் ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிம் டேவிட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டியின்போது கள நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.8- ஐ டேவிட் மீறியதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அபராதம் மற்றும் தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.