வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்…
இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள்.
இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது.
அடுத்த நாள் வேலையை ஆரம்பிக்க வேண்டும். இதனால், இவர்களுக்கு வரக்கூடிய ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன; வாரநாள்களில் குறைகிற தூக்கத்தை வாரயிறுதிகளில் ஈடுகட்டினால் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன.? தூக்கவியல் மருத்துவர் என். ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.
“‘பெரியவர்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்கூட வார நாள்களில் தூக்கக்குறைவால் அவதிப்படுகிறார்கள்.
நம்முடைய உடலுக்கு தூக்கம் என்பது உணவு, தண்ணீர், காற்று போலவே அத்தியாவசியம். ஆனால், இன்றைய காலத்தில் வேலைப்பளு, படிப்பு தரும் அழுத்தம், தொழில் சுமைகள் காரணமாக வார நாள்களில் பலருக்கும் போதுமான தூக்கம் கிடைப்பதில்லை.
அதனால்தான், பலரும் வாரயிறுதியில் தூங்கி, உடல் சோர்வை சரிசெய்ய முயற்சி செய்வார்கள். இதையே வாரயிறுதி தூக்கம் ‘Weekend Sleep’ என்று நாம் குறிப்பிடுகிறோம்.