பட மூலாதாரம், Getty Images
“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது.
“பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன” என இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், “ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்திய பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது” என்று ராய்ட்டர்ஸ் மற்றும் ஏ.எஃப்.பி செய்தி முகமைகள் கூறியுள்ளன.
பட மூலாதாரம், BBC Urdu
பட மூலாதாரம், Reuters
இந்திய அரசு தனது அறிக்கையில், “இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டன,” என்று கூறியுள்ளது. மொத்தம் ஒன்பது இலக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாக சமீப ட்வீட் ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எல்லையில் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் ஜியோ டிவியில் பேசுகையில், இந்தியா பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறுவது பொய் என்றும் அவை மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
ஆனால், தற்போது வரை, எந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை பிபிசியால் சுயாதீனமான உறுதி செய்ய முடியவில்லை.
இந்நிலையில், “பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக” இந்திய ராணுவம் கூறுகிறது.
இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக” தெரிவித்துள்ளது.
மேலும் அதில், “இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா எப்படி தாக்குதல் நடத்தியது?
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஏப்ரல் 22ஆம் தேதி லஷ்கரே இ தொய்பாவை சேர்ந்த பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள், கொடூரமான தாக்குதலை பஹல்காமில் சுற்றுலா வந்திருந்த இந்திய குடும்பங்கள் மீது நடத்தியிருந்தன. அதில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேரை கொலை செய்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், BBC Urdu
இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக புதன்கிழமை அதிகாலை 1:05 மணி மற்றும் 1:30 மணிக்கு இடையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளைத் தாக்கினோம்” என்று தெரிவித்தார். எதிர்வினை ஆற்றுவதற்கான, எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதில் கொடுப்பதற்கான உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் மிஸ்ரி, “இந்தியாவின் நடவடிக்கை குறிவைக்கப்பட்டது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது” என்று கூறினார். பஹல்காம் தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையைச் சீர்குலைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அவர் கூறினார். “இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பின்தங்கிய நிலையில் வைத்திருப்பதே இதன் நோக்கம்” என்று அவர் கூறினார். இது தவிர, நாட்டில் மதக் கலவரங்களைத் தூண்டும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
தீவிரவாத உட்கட்டமைப்பை அகற்ற பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் கூறினார். மேலும், இந்திய அரசின் செய்தியாளர் சந்திப்பில் “இந்தத் தாக்குதலில் பொது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், ANI
பாகிஸ்தான் எதிர்வினை என்ன?
இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளித்துப் பேசிய அவர், திருப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்று தெரிவித்தார்.
“எதிரி நாடு மிகவும் கோழைத்தனமாக பாகிஸ்தானின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியாவின் இந்தத் தாக்குதலை “போர்ச் செயல்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “இந்தப் போர்ச் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் நாட்டு மக்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணை நிற்கிறார்கள், நாட்டின் மன உறுதி வலிமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், “ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் பிரிவு 51இல் குறிப்பிடப்பட்டுள்ள தற்காப்பு உரிமையின்படி, பாகிஸ்தான் தனக்கு விருப்பமான நேரத்தில் மற்றும் இடத்தில் இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“எதிரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நன்றாகத் தெரியும். எதிரியின் தீய எண்ணங்கள் வெற்றி பெற ஒருபோதும் விடமாட்டோம்” என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஷார்ட் வீடியோ
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மீது தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. முசாபராபாத்தில் நடந்த தாக்குதலுக்கு பிந்தைய காணொளியை ஏபி செய்தி முகமை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காணொளியை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
பிபிசி உருதுவிடம் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், “தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்துள்ளதாக இந்தியா கூறுகிறது. சர்வதேச ஊடகத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை தீவிரவாத மறைவிடங்களா அல்லது பொதுமக்கள் வசிப்பிடங்களா என்பதை இங்கு வந்து அனைத்து பக்கங்களிலும் பாருங்கள்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இரண்டு மசூதிகளும் அடங்கும். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துல்லியமான சமீபத்திய தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. தாக்குதல் நடந்ததாக உறுதி செய்யப்படுள்ள ஏழு இடங்களில் இரண்டு காஷ்மீரிலும் ஐந்து பாகிஸ்தானிலும் உள்ளன. இவை அனைத்துமே பொது மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள்” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதுல்லா தரார், “அவர்கள் எங்கள் எல்லையைத் தாண்டியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துகளை தரார் மீண்டும் வலியுறுத்தினார். அவர், “இந்தத் தாக்குதல் நியாயமற்றது. இது முற்றிலும் திட்டமிடப்படாத தாக்குதல். நாங்கள் இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம். எங்கள் பதில் தாக்குதல் வானிலும் நிலத்திலும் தொடரும்” என்று தெரிவித்தார்.
தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
தாக்குதல் நடந்த இடத்தின் தற்போதைய நிலைமை குறித்து நேரில் கண்ட சிலர் பிபிசியிடம் பேசுகையில், “நாங்கள் எங்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட வெடிச்சத்தம் எங்களை உலுக்கியது. இப்போது எங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே இருக்கிறோம். பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்,” என்று முசாபராபாத்தில் வசிக்கும் ஷாநவாஸ் கூறினார்.
தாக்குதல்கள் மேலும் தொடரக்கூடும் என்று அங்குள்ள பலரும் அஞ்சுகிறார்கள்.
“முதல் குண்டுவெடிப்பு என் வீட்டை உலுக்கியபோது நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்,” என்று தாக்குதல் நடந்த பகுதியிலுள்ள பிலால் மசூதியில் வசிக்கும் முகமது வாஹீத் கூறினார்.
“நான் உடனடியாக வெளியே ஓடிச் சென்றபோது, மற்றவர்களும் அதே நிலையில் இருப்பதைக் கண்டேன். மேலும் மூன்று ஏவுகணைகள் வந்து விழுந்தபோது, அனைவரையும் பீதி மற்றும் குழப்பம் ஆட்கொண்டிருந்தது. எங்களால் நிலைமையைப் புரிந்துகொள்ளவே முடியாமல் இருந்தோம்,” என்று கூறினார் வாஹீத்.
மேலும், “டஜன் கணக்கான பெண்களும் ஆண்களும் காயமடைந்துள்ளனர். மக்கள் அவர்களை இங்கிருந்து சுமார் 25கி.மீ தொலைவிலுள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முசாபராபாத் நகருக்கு மிக அருகில் இருக்கிறோம். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்,” என்று வஹீத் கூறுகிறார்.
தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில் இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இது அவமானகரமானது. இப்போதுதான் கேள்விப்பட்டோம் ஓவல் அலுவலகத்திற்குள் இப்போது வரும்போதுதான் தெரிய வந்தது,” என்று தெரிவித்தார்.
மேலும், “கடந்த கால அனுபவங்களால், ஏதோ நடக்கப் போகிறது என மக்கள் அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் நீண்ட காலமாக, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன்,” என்று பதிலளித்தார்.
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “சர்வதேச எல்லையில் இந்தியாவின் ராணுவ தாக்குதல் குறித்து மிகவும் கவலை கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “முடிந்த வரை இரு நாட்டு ராணுவமும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று இரு நாடுகளுக்கும் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலுக்கான அபாயத்தை உலகம் தாங்காது” என்று தெரிவித்தார்.
“இரு நாட்டு தலைவர்களின் பெரிய சூதாட்டம்”
“இது இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு வியத்தகு மோதல்” என்று பிபிசி உலக சேவையின் தெற்கு ஆசிய ஆசிரியர், அன்பரசன் எத்திராஜன் தெரிவிக்கிறார்.
மேலும், “இந்தியா ஏதாவது ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் குண்டு வீசிய சில இடங்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவை என்றும், அவை பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைக்கவில்லை என்றும் இந்தியா கூறுகிறது.
பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக சூளுரைத்துள்ளது, இதன் தன்மையும் இலக்குகளும் டெல்லியின் எதிர்வினையைத் தீர்மானிக்கும்.
“இரு நாடுகளும் தீவிரமடையும் நிலைமைகளைச் சமாளிக்க முடியும் என்று நினைக்கின்றன, ஆனால் பதற்றங்கள் அதிகமாக உள்ளன. எந்தவொரு ராணுவ மோதலின் போக்கையும் கணிப்பது கடினம். கடந்த காலங்களில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் அவற்றைக் கட்டுப்படுத்த தலையிட்டன.
பட மூலாதாரம், BBC Urdu
மற்ற உலகளாவிய பிரச்னைகள் காரணமாக டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் திசை திருப்பப்பட்ட நிலையில், பதற்றத்தைத் தணிக்க வாஷிங்டன் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்,” என்கிறார் அன்பரசன்.
மேலும், “இரு நாடுகளிலும் உள்ள அரசியல் தலைவர்கள் தாங்கள் தீர்க்கமாகச் செயல்பட்டுள்ளோம் என்று தங்கள் மக்களுக்குக் காட்ட விரும்புவார்கள், வெற்றியைக் கோருவார்கள். அவர்கள் ஒரு பெரிய சூதாட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்” என்று குறிப்பிடுகிறார் அவர்.
‘மத்தியஸ்தம் செய்ய சரியான தருணம்’
மத்தியஸ்தம் செய்வதற்குச் சரியான தருணம் இது என்று வாஷிங்டனில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கல் குகல்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியா தாக்குதல் நடத்தியதாலும், பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் குறித்து எச்சரித்ததாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோதல் அபாயங்கள் அதிகமாக உள்ளன. இந்த ஆரம்ப நடவடிக்கைகளின் தன்மையின் அடிப்படையில், மேலும் விரோதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, “கடந்த மாதம் பஹல்காமில் நடந்த தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உடன்படுவதாகத் தெரிகிறது, ஆனால் பதற்றத்தைத் தணிப்பது அவசியம். ஏற்கெனவே தீப்பற்றி எரியும் உலகத்தில், குறிப்பாக இரண்டு அணு ஆயுத போட்டியாளர்களுக்கு இடையிலான ஒரு போரை யாரும் விரும்பவில்லை.
இந்தியா, பாகிஸ்தானுடன் நல்ல உறவுகளைக் கொண்ட நாடுகளான, அமெரிக்காவும் அரபு வளைகுடா நாடுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய நேரம் இது. அணுசக்தி அபாயங்கள் தொடங்குவதற்கு முன்பு இதைத் தணிப்பதற்கான வழிகளைத் தேடுமாறு இரு நாடுகளையும் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு