இந்நிலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவராக மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விஞ்ஞானி நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள், தாய் தங்கம்மாள். வன்னியபெருமாள் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார். ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ பள்ளியில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். நாகர்கோவில் அருகே உள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார். கோரக்பூர் ஐ.ஐ.டி-யில் கிரயோஜனிக் இன்ஜினீயரிங் பிரிவில் எம்.டெக் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் பி.ஹெச்.டி முடித்துள்ளார்.
விஞ்ஞானி நாராயணனுக்கு கவிதாராஜ் என்ற மனைவியும் அனுபமா என்ற மகளும், காலேஷ் என்ற மகனும் உள்ளனர். விஞ்ஞானி நாராயணன் தொடக்க காலத்தில் திருவனந்தபுரத்தில் திரவ உந்து விசை எரிவாயு செயல்பாட்டு மையத்தின் இயக்குனராகப் பணியாற்றி வந்தார். 1984-ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் ராக்கெட் உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். சி25 கிரயோஜனிக் திட்டக் குழுவில் இடம் பெற்று வழி நடத்தியிருந்தார்.