2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் ஷர்மா, 3வது பந்தில் களத்தில் உறுதியாக நின்றிருந்த மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
2011-ல் கார் விபத்தில் சிக்கிய இவர் சிறிது காலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதன் பின் ஒரு சில கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டார். இருந்தபோதும் 39 வயதான ஜோகிந்தர் ஷர்மா 2002 முதல் 2017 வரை ஹரியானா அணிக்காகப் பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜோகிந்தர் ஷர்மா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ-க்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.