விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஈயக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சுப்பிரமணியன், மீனாட்சி, சக்திவேல், மாரிமுத்து என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மாரிமுத்துவுக்கு மட்டும் திருமணமாகவில்லையாம். இந்த நிலையில், கட்டடக் கூலி வேலை செய்துவந்த பாலகிருஷ்ணனின் மூத்த மகன் சுப்ரமணியன், சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். மேலும், வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தந்தை பாலகிருஷ்ணன் கண்டிக்கும் சமயங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்திருக்கிறது.
அவ்வாறே நேற்று இரவும் மது போதையில் வந்த சுப்பிரமணியனுக்கும் அவரின் தந்தைக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில் இன்று அதிகாலையில் 7:30 மணி அளவிலும் போதையில் இருந்த சுப்ரமணியனை அவர் தந்தை கண்டித்தாராம். அப்போது தந்தை – மகனிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து, தந்தை பாலகிருஷ்ணனின் முதுகு, மார்பு பகுதிகளில் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.