நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.
“தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஜே1 வகையினை சார்ந்தது. இது பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சளி, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் வலி போன்ற உடல் உபாதைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பு.
குறிப்பாக தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். என்றாலும், இந்தப் பிரச்னைகள் உடல் உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவற்றிற்கு தடுப்பூசி அவசியம் இல்லாதது. பெரும்பாலும் மாத்திரைகள் மூலமே அறிகுறிகளை சரி செய்துவிடலாம்.
இந்த கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும், தும்மல், இருமல் போன்ற செயல்களின்போது வெளிப்படுகிற உடல் சுரப்புத்துளிகளின் மூலமாகவும் எளிதாக பரவக்கூடியது. அதனால், பொது இடங்கள், கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெகு தூரம் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துக்கொள்ளுங்கள். மற்றபடி, இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை” என்கிறார் டாக்டர் ராஜேஷ்.