30 பந்துகளுக்கு மேல் சந்தித்த பிறகு, முழுமையான பேட்ஸ்மேனை போல பிராப்பர் கிரிக்கெட்டிங் ஷாட் மூலம் தாக்கூர் பேட்டிலிருந்து பவுண்டரிகள் வந்துக்கொண்டே இருந்தன. கம்மின்ஸ் ஓவரில் சிக்ஸருடன் அரை சதம் அடித்தார் ரஹானே. விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் பொறுப்புடன் விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல் தனது மோசமான ஃபார்மினால் துணை கேப்டனாக அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் 512 நாள்களுக்குப் பிறகு அணியில் நுழைந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார் அஜிங்கியா ரஹானே.
ரஹானே – தாக்கூர் இணை ஆஸ்திரேலியா பௌலர்களுக்கு எதிராக தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இதில் தாக்கூரின் ஆட்டத்திறனை வெகுவாகப் பாராட்ட வேண்டும். தொடக்கத்தில் ஆஸ்திரேலிய பௌலர்களிடம் தடுமாறினாலும் செட்டில் ஆன பிறகு அச்சமில்லாமல் கம்மின்ஸ், ஸ்டார்க் போலண்ட் ஆகியோரின் ஓவர்களில் அடிக்க ஆரம்பித்தார். அதுவும் ஸ்டார்க் ஓவரில் ஸ்ட்ரெய்ட்டில் பவுண்டரியை பறக்கவிட்டிருந்தார் தாகூர்.
ரஹானேவுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்க, கம்மின்ஸ் நோ பால் அவரின் விக்கெட்டைக் காப்பாற்றியது. ரஹானே – தாக்கூர் இடையிலான 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் இந்தியா பாலோ ஆனைத் தவிர்த்தது. சதத்தை நோக்கி ஆடிக் கொண்டிருந்த ரஹானே ஸ்லிப்பில் க்ரீனின் அட்டகாசமான கேட்ச்சால் 89 ரன்களுடன் வெளியேறினார்.