லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, “ஐ.பி.எல் முடிந்த சிறிது நாள்களிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டது. இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால் இந்திய அணி ஒருபோதும் வெல்ல முடியாது. இதுகுறித்து பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும். இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிறது என்றால், இந்திய அணி அதற்குத் தகுதி பெற்று இருக்கிறது என்றால், அந்த நேரத்தில் இந்திய அணி வீரர்களைப் பயன்படுத்துவது குறித்து சில விதிமுறைகள் ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட வேண்டும்.
ஐ.சி.சி கோப்பைகளை வெல்லுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரை ரோஹித்தும் புஜாராவும் தாங்கள் ஆடிய ஷாட்களைப் பார்த்து அவர்களை அவர்களே திட்டிக்கொள்வார்கள். இருவரும் அப்படியொரு மோசமான ஷாட்களை விளையாடினார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.