ஐபிஎல் வரலாற்றில் இதுவரை யாரும் காணாத ஒரு ஆட்டத்தை 14 வயது சிறுவன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற குஜராத் vs ராஜஸ்தான் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, கில், பட்லர் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 209 ரன்கள் குவித்தது.
ஆனால், இதுவரை நடந்ததெல்லாம் அதிரடி அல்ல இனிமே நான் காட்டப்போறதுதான் அதிரடி என, ராஜஸ்தானில் அணியில் ஓப்பனிங்கில் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, துளி பயம் கூட கண்ணில் இல்லாமல், 35 பந்துகளில் 11 சிக்ஸ், 7 பவுண்டரி என சதமடித்து ஐ.பி.எல் சாதனைப் பட்டியலைப் புரட்டிப் போட்டார்.
இறுதியில் ஜெய்ஸ்வாலின் கூடுதல் நிதான அதிரடியோடு, 16-வது ஓவரிலேயே 212 ரன்கள் அடித்து ராஜஸ்தான் வெற்றிபெற, ஆட்ட நாயகன் விருதை வென்றார் வைபவ் சூர்யவன்ஷி. இவரின் ஆட்டத்தைப் பலரும் புகழ்ந்துவரும் நிலையில், உலக கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரும் இவருக்குப் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்த நொடியின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “வைபவின் பயமில்லா அணுகுமுறை, பேட்டின் வேகம், லென்த்தை முன்கூட்டியே பிக் செய்வது, பந்தின்மீது தனது ஆற்றலைச் செலுத்துவது ஆகியவையே இந்த அற்புதமான இன்னிங்ஸின் செயல்முறை. 38 பந்துகளில் 101 ரன்கள். நன்றாக விளையாடினீர்கள்.” என்று பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.