இந்திய அணி இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. இதுவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி எதிர்கொண்ட அதிகபட்ச இலக்காகும். இந்த இலக்கை 16.3 ஓவர்களிலேயே சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்வேதா செஹ்ராவத், 95 ரன்கள் (20 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அணியின் கேப்டன் ஷஃபாலி வர்மா 45 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதிரடியான வெற்றியைப் பதிவு செய்தது, இந்திய அணி.
அடுத்ததாக இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்வேதா செஹ்ராவத் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகிய இருவரும் இணைந்து கடந்த ஆட்டத்தைப் போலவே அதிரடியாக விளையாடினர். ஸ்வேதா செஹ்ராவத் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷஃபாலி வர்மா 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சைக் கடைசிவரை சமாளிக்க முடியாமல் திணறினர். முடிவில் 20 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி.