அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.
உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருக்கிறார்.
இந்த வரி போக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய 10% அடிப்படை வரியும் கூடுதலாக உண்டு.

இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு அமெரிக்கா முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் ஆசிய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டுள்ளது. அது இந்திய பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.
இன்று காலையில் பங்குச்சந்தை திறந்தபோது பி.எஸ்.சி எனப்படும் மும்பை பங்குச்சந்தை 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையான என்.எஸ்.சி. ஒரே நேரத்தில் 1000 புள்ளிகள் சரிந்தது.