எந்த ஆடுகளத்தின் உருவாக்கத்தில் அறிவியலும், தொழில்நுட்பமும் கைகோத்து பங்குகொள்கிறதோ, அக்களச் சூழலை வாசித்தறிதல் என்பதே ஒரு கலைதான். ஆஸ்திரேலிய களத்திலோ இவற்றோடு அழகியலும் சமத்துவமும் கூடுதலாகக் கைகோத்துக் கொள்கின்றன.
ஒரு சார்பாய் இல்லாமல் பேட்ஸ்மேனிலிருந்து பௌலர் வரை, அதிலும் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர் என எல்லோருக்கும் சமவாய்ப்பளிக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளம், வரவேற்பைப் பெற்றுள்ளதோடு டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த உலகக்கோப்பையாக 2022 தொடரை கருத வைத்துவிட்டது. இத்தொடர் முழுவதிலும் பேட்டுடனும், பாலுடனும் தனித்தனியாக நட்புப் பாராட்டிய களம், அவற்றுக்குள் கலகத்தை உருவாக்கி, அதனை ஆர்வத்தைத் தூண்டுமாறு காட்சிப்படுத்தியது. விக்ரம் வேதாவாக, பேட்டும் பாலும் தொடர்முழுவதும் ஒன்றுக்கு ஒன்று ஈடுகொடுக்க, விஷமத்தோடு ஆஸ்திரேலிய பிட்ச் அதற்கு வழிவகை செய்து வேடிக்கை பார்த்தது.
கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை, சுவாரஸ்யத்தின் சுவடுகூட தெரியாமல் நகர்ந்தது. பொதுவாக, நாணய சுழற்சியில்கூட 50 : 50 வாய்ப்பு தலை விழவும், பூ விழவும் உண்டென்று நிகழ்தகவு நிறுவுகிறது. ஆனால், கடந்த முறையோ டாஸை வென்ற அணிகள்தான் 70 சதவிகிதம் போட்டிகளை வென்றிருந்தன.
உலகக்கோப்பைக்கு முன்னதாக அரபு மண்ணில் நடந்த ஐபிஎல்லை வைத்தே ரிக்கி பாண்டிங், கோலி உள்ளிட்டோர் பிட்ச் ஸ்லோவாக இருக்கிறதென்றும் இதுவே உலககோப்பையில் தொடர்ந்தால் லோ ஸ்கோரிங் ஒன்சைடட் கேம்கள் ஆர்வத்தைக் குலைக்கும் என்றும் கூறியிருந்தனர். அதன்பின்னர் உலகக்கோப்பைக்காக சற்றே மேம்படுத்தப்பட்டிருந்தாலும் பனிப்பொழிவு வில்லனாக உட்புகுந்தது. முதலில் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கிறதென்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியிருந்தார். ஆக, டாஸ் வெல்லும் அணிகள் அத்தனையும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்து பின் ஸ்கோரை சுலபமாக சேஸும் செய்து சகலத்தையும் சாதகமாக்கின.
இதனாலேயே கடந்தமுறை முதலில் பௌலிங் செய்த அணி 70% போட்டிகளை வென்றிருந்தது.