அகமதாபாத்தில் இன்று (பிப். 26) நடைபெற்ற முக்கியமான சூப்பர் 8 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் அவர்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
இந்தப் போட்டி இந்தியாவின் செமி ஃபைனல் வாய்ப்பையும் தீர்மானிக்கும் வகையில் இருந்ததால், இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கிங் மற்றும் ஹோப் களமிறங்கி, ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்களில் 29 ரன்களை எடுத்துக் கொண்டு அதிரடியாக தொடங்கினர்.
ஆனால் அந்த வேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில், தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு சிக்கி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர்.